Tuesday, June 27, 2017

மாடு வளர்ப்பு இயற்கை மீதான வன்முறை:

மாடு வளர்ப்பு இயற்கை மீதான வன்முறை:
கடந்த பத்து இருபது வருடங்களாய் அறிவியலாளர்கள் வெளியே தைரியமாக சொல்ல முடியாத ஒரு உண்மை இது. பெரும் ஊடகங்கள் மக்கள் குழம்பி விடக்கூடாதென சொல்லாமல் இருக்கும் செய்தி இது. திரைமறைவில் வல்லுனர்கள் மண்டையை பிராண்டிக் கொண்டிருக்கும் சிக்கல் இது.
"கால்நடை வளர்ப்பு, அதிலும் மாடுகள் வளர்ப்பதால் பூமி வெப்பமாகிறது" என்பதுதான் அது.
என்ன பாஸு எப்படி இது என்றால் - மாடுகள் புல் இலை தழைகளைத் தின்று மாமிசமாகவும் பாலாகவும் மாற்றும் அந்த செயலின் பக்க விளைவுகளாக பூமி வெப்பத்தை அதிகரிக்க செய்யும் கரிம வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுகளையும் ஏப்பம் மூலமும் அதன் கழிவோடு சேர்த்தும் பின்னர் மாட்டு சானத்திலிருந்தும் வெளியேற்றுகிறது. இதனால் பூமி வெப்பமாவற்கு துணை செய்கிறது.
வளிமண்டலத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில வாயுக்கள் பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் பண்பு கொண்டவை. அதாவது கம்பளி ஆடை போன்றது. இந்த வாயுக்கள் இருப்பதால் தான் உயிரினங்களுக்கு ஏற்ற வளி மண்டலம் இந்த பூமியில் இருக்கிறது. ஆனால் அதே வாயுக்களின் சதவிதம் அதிகமாகும் பொழுது பூமியின் வெப்ப நிலை இன்னும் இன்னும் அதிகமாகும். இப்படி பூமியின் வெப்பம் அதிகமானால் பூமியின் தட்ப வெப்பம் மாறுதலுக்கு உள்ளாகும். பெரும் இயற்கை மாற்றங்களை உருவாக்கும். மனிதர்கள் வாழ முடியாத சூழல் உருவாகும்.
 
கால்நடைகள் அதிலும் மாடுகள் வெளியேற்றும் மீதேன், கார்பென் டை அக்ஸைட் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுக்களின் அளவு மிக அதிகமாக இருக்கிறது என கால்நடை வல்லுநர்கள் (நம்ம ஊர் 'கோ' மகன்கள் அல்ல) கணித்துள்ளனர். கிரீன்ஹவுஸ் வாய்வுகள் பல்வேறு விதங்களில் வெளியேறுகின்றன. உதாரணமாக பெட்ரோல்,டீசல் ,நிலக்கரி போன்றவற்றை எரிப்பதால் உருவாகும். காடுகளையும் கடல் தாவரங்களையும் 'ஆல்கே'எனப்படும் பச்சையங்களை அழிப்பதாலும் அதிகமாகும்.
இந்த வகையில் உலகில் வெளியேற்றப்படும் இந்த வாயுக்களின் 18 விழுக்காடு கால்நடை மூலம் வெளியேறுகின்றன என்பது உறுதி செய்யப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 18% என்பது நாம் கார், பைக், ப்ளேன் போன்ற போக்குவரத்து மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்படும் அளவை விட அதிகம் என்பது குறிப்பிட வேண்டிய ஓப்பீடாகும். அதாவது, மோட்டார் புகை போக்கி வழியாக வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்களுக்கு நிகராக மாடு வாயிலிருந்தும் அதன் ஆசன வாயிலிருந்து வாயுக்கள் வெளி வருகின்றன.ஆனால் நம் கவலை முழுதும் கோமியத்திலேயே ஊறிக்கொண்டிருக்கிறது!
மேலும் கால் நடைகளுக்காக உணவு உற்பத்தி செய்யவும் அவற்றை வளர்பதற்காகவும் பல காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்களில் ஒன்றான கார்பென் டை ஆக்ஸைடை (CO2) சுத்திகரிக்கும் ஆற்றல் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நமது தேவைக்காக, வாயுக்களை உறிஞ்சும் மரங்களை அழித்து அங்கு தீமையான வாயுக்களை உருவாக்கும் கால் நடைகளை வளர்த்து வருகிறோம். அதாவது கால்நடைகள் வளர்ப்பு எனும் தொழில் மறைமுகமாக இயற்கை மீது நடத்தும் தீய (பக்க)விளைவு எனலாம்.
இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்களில் மிக அதிகமாக வெப்பத்தை தக்க வைக்கும் தன்மை கொண்ட வாயுக்களான மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்றவைகள் மிக அதிகமாக வெளியேற்றுவது மாடுகளும் கால் நடைகள்தானாம். இது இன்றைய நிலைதான். ஆனால் 2050 க்குள் கால் நடை மற்றும் விவசாயம் செய்வதன் மூலம் வெளியேறும் நச்சு வாயுக்கள் 80 விழுக்காடுகள் அதிகரிக்க செய்யும் எனவும் கணித்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் பூமி வெப்பமாவதை தடுக்க முடியாது, பனிப் பிரதேச பனிப்பாறைகள் உருகுவதையும் தடுக்க முடியாது. பஞ்சம், வெள்ளம் இன்னும் நாம் கண்டிராத இயற்கை பேரிடர்களை தவிர்க்கவும் முடியாது. முடியவே முடியாதுங்க.
ஜல்லிகட்டாகட்டும், இப்பொழுது விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் பசுக் காதலாகட்டும் எனக்கு எரிச்சலை உருவாக்கி கொண்டிருந்தது. ஏன் இப்படி அதீத கால்நடைக் காதல் நமக்கு என.
இயற்கை மீது பற்றும் புனிதமும் காதலும் ரொமான்ஸும் இயற்கையை சீரழிக்கவே செய்யும் #வெரிபைட் . 
        இயற்கை மீது பக்தி, அதனோடு காதல், அதன் மீது பற்று, இன்னும் அதை தெய்வமாக பார்த்தல் போன்றவை புராதன மூட நம்பிக்கையில் ஒன்று - இந்த மூட நம்பிக்கை ஒட்டு மொத்த மானிடர்களுக்கும் பேரிடராக முடியப் போகிறது. இவை அனைத்தும் மனிதனின் பயத்தாலும் சுய நலத்தாலும் உருவாகும் ஒரு வித பீதி உணர்வே. இதற்கு நேர் எதிர் வாதம் இனி யாரும் மாடு வளர்க்க கூடாது யாரும் மாட்டை திங்க கூடாது என்பதாகும். இந்த இரு நேர் எதிர் பார்வைகளை தவிர்த்து அறிவியல் முறை பார்வை ஒன்று இருக்கிறது. அதுதான்
Social metabolism என்கிற முறை. 
 மார்க்ஸிய பார்வையில் சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் முறைதான் இந்த சோஷியல் மெட்டாபாலிச முறை, அதைப் பற்றி இந்த கட்றுஐயின் முடிவில் சுருக்கமாக விளக்கியுள்ளேன். 

மாடுகள் ஏன் இவ்வளவு வாயுக்களை வெளியேற்றுகின்றன? வாயுக்களை வெளியேறதுவது என்பது அதன் இயல்பு ( நம்மூரில் அது ஆக்சிஜன் வெளியேற்றுதுன்னு புனித கும்மி இன்னும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது என்பது வேறு கதை). ஆனால் மாடுகள் மூலம் பெறப்படும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்காக மனிதர்களின் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதுதான் காரணம் . மாட்டை குறை சொல்லக் கூடாது. தன் உணவு எப்படி இந்த பூமியை பாழாக்குகிறது என்கிற புரிதல் இல்லாமல் " பணம்" என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு வளர்க்கும் நாம் தான் காரணம்.
இதற்கு தீர்வாக மனித மூளை தொழில் நுட்பத்தையே நாடும். குறைவான வாய்வுகளை வெளியேற்றும் மாட்டுத்தீவனங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லா பிரச்சனைகளுக்கும் பணம் / தொழில் நுட்பம் மட்டுமே தீர்வென நம்பும் அரசாங்கங்ளும்
அதற்குதான் பணத்தை செலவழிக்கும். ஆனால் தீர்வு கிடைக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள்.
உலகின் ஒரு மூலையில் மனிதர்களுக்கு உண்ண உணவு இல்லை இன்னோரு மூலையிலோ மனிதன் மாடுகளிடமிருந்து கிடைக்கும் இறைச்சி பால் போன்றவற்றை உண்டு க(ளி)ழிக்க மாடுகளுக்கான உணவுகள் அதி தீவிரமாக வளர்க்கப்படுகிறது. இந்த சம நிலை சிதைந்து போனால் இயற்கை சம நிலையும் சிதைந்துதான் போகும். பூமி வெப்பமாகதான் செய்யும். சமுதாய முறை தீர்வு மட்டுமே உலகை காப்பாற்றும்.
எழுதிய பிறகு வாசித்துப் பார்த்தேன் டக்கென கமெண்ட் ஒன்று தோன்றியது - மத்தவனுக்கு கொடுக்காம அதிகமா திங்க,நாம் காடு மலையெல்லாம் அழிக்கிறோம். அதே சமயம் இன்னோரு பக்கம் புனிதம் ,காதல் என பல முறைகளில் மாட்டை பாதுகாக்கிறோம். மாடோ அது பாட்டுக்கு குசு விட்டு உலகத்தை அழிச்சிகிட்டிருக்கு. Shame on you human ... let me fart on your system என அசைபோட்டுகிட்டே இருக்கு நம்ம மாடுகள்..
ஒரு கோஷ்டி மாமிசம் நல்லதுங்குது இன்னோன்னு மூத்திரம் பால் சானி நல்லதுங்குது இந்த குமச்சலில் மாட்டுக் குசுவை கவணிக்காம விட்டுட்டாய்ங்க... ப்ளடி கவ் பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்.


........


சோஷியல் மெட்டபாலிசம்:
ஒரு உயிர் உட்கொள்ளும் உணவு, அதன் செறிமானம், அதை சக்தியாக மாற்றுதல் பின்னர் எஞ்சியதை கழிவாக்குதல் என்கிற ஒவ்வரு உயிர் செல்லிலும் நடக்கும் மிக அடிப்படையான செயலே மெட்டபாலிசம் ( வளர்சிதை மாற்றம்), இந்த வளர்சிதை மாற்றத்தின் மூலமே ஒரு உயிர் வாழ்கிறது, இனப்பெறுக்கம் செய்கிறது, சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறது, மூன்று வரிகளில் இதை சொல்ல முடிந்தென்றாலும் இதற்குள் நூற்றுக்கு அதிகமான இரசாயன மாற்றங்கள் நடப்பதே இந்த மெட்டபாலிசம்.

இதேபோலதான் சமுதாய மெட்டபாலிசம் எனப்படுவதும், மனிதன் எப்படி தன் சுற்றுப்புறத்திடம் வளங்களை பெருகிறான், அதை பொருளாக செய்கிறான், மெருகூட்டுகிறான், பயன்படுத்துகிறான், ஏதேதோ புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருகிறான், கழிவுகளை சுற்றுபுறத்திடமே அனுப்புகிறான். இந்த செயல் மனிதனின் அடிப்படை குணம் இது ஒரு உயிரின் மெட்டபாலிசத்திற்கு ஒப்பானது.
மனிதனின் வாழ்வின் இன்றியமையாத ஆதார செயல் இது.

இந்த முறை பார்வையில் எது இயற்கை என பிரிக்க முடியுமா என பாருங்கள்? மனிதரும் இயற்கையின் ஒரு அங்கம் எனும் பழய சிந்தனை என ஒதுக்கிவிட கூடாது, முதலாளித்துவ முந்தய காலத்தில் உனர்வுபூர்வமாக இந்த தொடர்பு உனரப்பட்டு வந்துள்ளதுதான் அதை மறுப்பதற்கில்லை, ஆனால் வெறும் உனர்வுபூர்வமான அந்த புரிதலில் இயற்கையின் மீது பயமும் மரியாதை இருந்ததே தவிர நேர்த்தியான செயலாக்கம் இருந்ததில்லை.
உனர்வு பூர்வமான புரிதலால் முதலாளித்துவம் கொண்டு வந்த சிரழிவுகளை தடுக்கவோ சரி செய்யவோ முடியவில்லைதானே. ஆனால் இந்த ”சமுதாய மெட்டபாலிசம் “ முறை பார்வையில் மனித சமுதாயம் எவ்வளவு அழகாக இயற்கையோடு அறிவால் ஒத்துக் கொள்லும் விதத்தில் ஒன்றாகிவிட்டது பாருங்கள்.
இந்த புரிதல் கொண்டு இயற்கை அழிவுகளை அனுகி பாருத்தால்? எப்படி இருக்கும்?
நாம் கட்டமைத்த இன்றைய சமுதாயத்திலிருந்துதானே செப்பனிடுதலை அரம்பிக்க முடியும். புதிய தொழில் நுட்பங்களை கொண்டு இயற்கையை சரி செய்துவிடலாம் என்கிற இன்றய நம்பிக்கையை சந்தேகிக்க முடியும்.
சமுதாய மெட்டபாலிசம் --- a paradigm shift...

2 comments:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete